×

கார் டயர் வெடித்து 2 பேர் பலி

மணப்பாறை, நவ.1: மணப்பாறை அருகே கார் டயர் வெடித்ததில் எலக்ட்ரிக்கல் கடைக்காரர் மற்றும் அவரது நண்பர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை சேர்ந்தவர் பழனிவேல்(33). இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவரது நண்பர் பழனிச்சாமி. இவர்கள் இருவரும் சொந்த வேலை காரணமாக நேற்று சேலத்திற்கு காரில் சென்றனர். அங்கு அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு பொன்னமராவதியை ேநாக்கி திரும்பி கொண்டிருந்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே களத்துப்பட்டி என்ற இடத்தில் வரும்போது காரின் டயர் வெடித்தது. இதனால் கார் சாலையில் இடது புறத்தில் ஓடியது. இதனைக்கண்ட அவர்கள் அலறினர். தாறுமாறாக ஓடிய கார் சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிக்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பழனிவேல் இறந்தார். இதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி பழனிச்சாமியும் திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED சிக்கன் கடைக்காரரிடம் பணம் பறித்தவர் கைது